கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ், சயனின் மனைவி மற்றும் குழந்தை சாலை விபத்தில் உயிரிழந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்ட 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான மற்றும் எதிர் தரப்பினர் ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 18 பேரையும் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் பங்குதாரராக இருந்ததால், அந்த பங்களாவில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க, நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று காலை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு சரியாக பதிலளித்துவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறினார். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, இளவரை ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:-
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி போலீஸ் உயர் அதிகாரிகள் சசிகலாவை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. சுதாகரன் நேற்று கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இளவரை விசாரணைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
அதேபோல், சேலம் விபத்தில் உயிரிழந்த கனகராஜுக்கு, கொடநாடு காவலர் கனகராஜ் செல்போனில் மெசேஜ் அனுப்பியதாகவும், அதன்பிறகுதான் கனகராஜ் இறந்ததாகவும் விசாரணையில் சிலர் கூறியுள்ளனர். போலீஸ்காரர் கனகராஜின் செல்போன் கிடைத்தால்தான் இதில் உண்மை தெரியவரும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.