சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவியதை அடுத்து உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இந்த ஐடி நிறுவனத்தின் இந்த முயற்சி ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.
சென்னை – ஈக்காட்டுதாங்கலில் கடந்த 15 ஆண்டுகளாக ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பாராட்டு விழா சமீபத்தில் மதுரவாயலில் நடைபெற்றது. இதில், ஊழியர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆனந்தன் சண்முகம், பிரபாகர், சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 முதல் 15 ஆண்டுகளாக பணிபுரியும் சிறந்த பணியாளர்கள் 6 பேருக்கு கார் மற்றும் 5 பைக்குகளை வழங்கினார். மேலும், 20 பணியாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், ‘நமக்கு அனைத்தையும் வழங்கிய சமூகத்துக்கு நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்றார்.
‘கடினமாக உழைத்தால், நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் உயர முடியும்’ என்கிறார் ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்தன் சண்முகம். பரிசளிப்பு விழாவில் பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.