சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இரண்டரை மணி நேரம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர், முதல்வர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் இருந்தபோதும் முதல்வர் ஸ்டாலின் தனது அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று அதிகாரிகளுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஆய்வு செய்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்துடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விசாரித்தார். 21 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எத்தனை மனுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன, அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்த முதல்வர், திட்ட முகாம்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர வேண்டும், முகாம்களுக்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் நலமாக உள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவார்” என்றார்.