தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த 16.09.2025 முதல் 07.10.2025 வரை தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட, கல்லூரி கலைத் திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது, கலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற 250 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழை வழங்கினார். மேலும் 3 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கினார்.
வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் ப. ஜெயக்குமார், முனைவர் இரா. அருண்மொழி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முனைவர் இரா.இராஜவினோதா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் ர.ராஜ்மோகன் வரவேற்றார். நிறைவாக, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் நா.பழனிவேலு நன்றி கூறினார்.