
சென்னை: உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. சிங்கப்பூரில் மட்டும் மே மாத தொடக்கத்தில் 14,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகினர்.

இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் புதிய வகை திரிபுகள், குறிப்பாக NB.1.8.1 மற்றும் LF.7, பரவத் தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொதுமக்கள் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது தவிர்க்க முடியாததாகும்.
மேலும், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இருமும்போது கை மூடியிருக்க வேண்டும், தொற்றாளர்களிடமிருந்து தொலைவில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பருவகாலத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் சுகாதாரம் மற்றும் ஒழுங்குகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.