தேவாரம்: 18-ம் கால்வாய் தூர்வாரப்படாததாலும், கரைகள் பலப்படுத்தப்படாததாலும் தேவாரம்-போடி பகுதிகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே, கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோம்பை, தேவாரம், பண்ணாபுரம், போடி புறநகர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக பாசன வசதிக்காக 18-வது கால்வாய் அமைக்கப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறை உத்தரவின் பேரில் முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து பாசனத்திற்காக 18-ம் கால்வாயில் கடந்த 21-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் பாசனத்துக்கு கால்வாய் திறக்கப்பட்டதால், பல்வேறு இடங்களில் வாய்க்கால் கரைகள் உடைந்து, சாலை, கால்வாயை ஒட்டிய விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது. குறிப்பாக கூடலூர் வைரவன் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேவாரம்-போடி பகுதிக்கு 10 நாட்களாகியும் முழுமையாக வரவில்லை. தற்போது கண்மாய்க்கு தண்ணீர் செல்லாமல் வீணாக செல்கிறது. எனவே பதினெட்டாம் கால்வாயை சீரமைத்து கடையமடை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.