சென்னை: இந்த ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இதற்காக ரூ. 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் தலைமையில், ரேஷன் கடைகள் மூலம் பரிசுப் பொட்டலங்களை வழங்குவதற்காக கடந்த 3-ம் தேதி முதல் ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நியாய விலைக் கடையில் (கடை எண் 11) காலை 9 மணிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசுப் பெட்டியை வழங்குவார்கள். தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு பெட்டி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 95 சதவீத மக்களுக்கு டோக்கன் விநியோகித்துள்ளோம்.
சிலர் வெளிநாடு சென்றுள்ளதால், அவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களை அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை பரிசுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதால், பொதுமக்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.