
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுக்கான இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அதன் படி, குரூப் 2 பிரிவில் 534 காலிப் பணியிடங்களுக்கும், 2ஏ பிரிவில் 2006 பணியிடங்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு முதன்மைத் தேர்வும் நடத்தப்படும் என்பதால், பிப்ரவரி 8ஆம் தேதி முதன்மைத் தேர்வின் முதல் கட்டமான கொள் குறி வகை தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் தேதி விரிவுரைக் கேள்விகள் அடங்கிய இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், முதன்மைத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 5,83,467 பேர் தேர்வெழுதி உள்ளனர். 2,10,499 பேர் தேர்வை எழுதவில்லை. இந்த முடிவுகள் 53 பணி நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 2 தேர்வுகள் தொழிலாளர் நலத்துறை, வணிகவரி, இந்து சமய அறநிலையத் துறை, கூட்டுறவு துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், இளநிலை கணக்காளர், தணிக்கை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்பட்டன. தேர்வின் முடிவுகள் குறித்து மேலதிக தகவலுக்கு tnpsc.in இணையதளத்தை பார்வையிடலாம்.