தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகத்தை வழிநடத்த தகுதியானவர் என்றும், அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருப்பதாக ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த அவர், ஒரு நடிகராக இருந்து உடனடியாக முதல்வர் ஆக முடியாது; அப்படி நடப்பது அரிதிலும் அரிது என குறிப்பிட்டார். அதே நேரத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவரென பாராட்டினார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. கட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.க.) அ.தி.மு.க. மீண்டும் சேர்ந்தால் மகிழ்ச்சி எனக் கூறினார். ஏற்கனவே தே.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., மீண்டும் பொருந்தலாமே எனவும் அவர் தெரிவித்தார்.
திமுகவை நேரடியாக விமர்சித்த பவன் கல்யாண், பல திமுக எம்.பி.க்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள்; ஆனால், பொதுமக்கள் முன் வந்து ஹிந்தியை எதிர்க்கிறார்கள். கண்மூடித்தனமாக எதிர்ப்பதை விரும்பவில்லை என்றார்.
தேசிய கல்விக்கொள்கை (NEP) ஹிந்தியை திணிக்கவில்லை என்றும், திணித்தால் நானே அதற்கு எதிர்ப்பேன் எனக் கூறினார். ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை நீண்ட காலமாக பாலோ செய்து வருவதாகவும், அவர் சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார் என்றும் பாராட்டினார்.
அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டவர் என்பதால், தமிழகத்தைக் கையாளும் திறமை அவருக்கு உள்ளது என்றும், அவருக்கு அரசியல் வரலாற்றில் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக உறுதியுடன் நம்புகிறேன் என்றார். இவ்வாறு பவன் கல்யாண் தனது பேட்டியில் தெரிவித்தார்.