தஞ்சாவூர்: ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஓய்வுபெற்ற பொதுத்துறை நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.47.30 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (67) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வாட்ஸ்-அப்பிற்கு கடந்த மாதம் 31-ந் தேதி டிரேடிங் மூலம் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என மெசேஜ் வந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட டிரேடிங் நிறுவனத்தின் தொடர்புக்கான செல்போன் எண்ணும் இருந்துள்ளது. சுப்பிரமணியனுக்கு ஏற்கனவே டிரேடிங்கில் அனுபவம் இருந்ததால் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது டிரேடிங் நிறுவனத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய பெண் ஒருவர் ஆன்லைன் டிரேடிங் குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய சுப்பிரமணியனும் அந்த பெண் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். தொடர்ந்து அந்த செயலியில் குறிப்பிட்டபடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். ஆரம்பத்தில் சிறிது சிறிதாக பணம் டெபாசிட் செய்த சுப்பிரமணியனுக்கு லாபத்தொகையாக ரூ.1 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிக லாபம் கிடைக்கிறது என்று நம்பிய சுப்பிரமணியன் அந்த பெண் கூறிய 4 வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் 11 தவணையில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இதற்கான லாபத்தொகையாக ரூ.77 லட்சம் கிடைத்துள்ளதாக அந்த செயலியின் வாலட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் மாற்றுவதற்காக டிரேடிங் நிறுவனத்தாரை தொடர்பு கொள்ள சுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். ஆனால் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது. பலமுறை தொடர்பு கொண்டும் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை சுப்பிரமணியன் உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணியன் பணம் செலுத்திய 4 வங்கி கணக்குகளும் டெல்லி, உத்தரபிரதேசம் மாநில வங்கி கணக்குகள் என்பது தெரியவந்து. மேலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.