சென்னை: இன்றைய காலகட்டத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தம்பதிகள் விவாகரத்து செய்து விடுகின்றனர். இதற்கு காரணம் ஒருவரின் குணங்கள் தான். அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது. எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம்.
நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை.
இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.
அகங்காரம்: எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே “திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்” என்று நினைக்க வேண்டும்.
சந்தேகம்: சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.
பேச்சு இடைவெளி: தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.
நேரம்: இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.