பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர்.
தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிட்டு, மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகிக்க வேண்டும். திருத்தங்கள் இருப்பின் மாவட்ட தேர்வு அலுவலகங்களில் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.