இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல தாழ்வு மண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 13 மற்றும் 14-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கலாம். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் 6 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 4 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 3 செ.மீ., ஆலங்காயம், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.