உறவில் சந்தேகம் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது. பெண்களை விட ஆண்கள் அதிகமாகவே சந்தேகப்படுவார்கள் ஆனால் அது ரகசியமாக இருப்பதால் உங்களால் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. சாதாரணமாக நண்பர்களுடன் பேசுவதில் ஆரம்பித்து வெளியே செல்வது ஒன்றாக உண்பது வரை பல்வேறு இடங்களில் இந்த சந்தேகம் அவர்களுக்கு ஏற்படலாம். இதற்கான முதல் காரணம் அவர்கள் மீதான தன்னம்பிக்கையின்மை இரண்டாவது காரணம் பாதுகாப்பு. உங்கள் வாழ்வில் இப்படி ஒரு சிக்கல் இருந்தால் எப்படி செயல்படுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சந்தேகம் இருக்கிறது என்பதை உணர்ந்ததும் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது சரியான சந்தர்ப்பத்தில் இது பற்றிய புரிதலை உங்கள் பிரியமானவருக்கு உணர்த்த வேண்டும். உங்கள் நண்பருக்கும் உங்களுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்பது பற்றியும் உங்கள் நண்பனின் நல்ல குணங்கள் மற்றும் நடத்தை பற்றியும் நீங்கள் அவருக்கு புரியவைக்க வேண்டியது அவசியம். உங்கள் உறவில் அவருக்குள்ள பாதுகாப்பின்மை உணர்வு இதன் மூலம் நீங்கும்.
உங்கள் காதலருக்கு தெரியாமல் அவர் சந்தேகப்படுவார் கோபப்படுவார் என்பது போன்ற காரணங்களால் அவரிடம் பொய் சொல்லி விட்டு வெளியே செல்லாதீர்கள். உண்மை வெளிப்படும்போது உங்கள் உறவை நீங்கள் இழக்கவும் நேரிடலாம். சாதாரண பாதுகாப்பின்மை உணர்வு சந்தேகமாக மாறுவது இந்த இடத்தில்தான். ஆகவே பொய் கூறுவதை தவிர்க்கவும்.
உங்கள் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்கையில் முடிந்தவரை உங்கள் காதலரை உடன் அழைத்து கொள்ளுங்கள். உங்கள் நட்பின் மீதான நம்பிக்கை அவருக்கு அப்போது அதிகரிக்கும். மேலும் உங்கள் நண்பரும் உங்கள் காதலருடன் இணைந்து பழகும் வாய்ப்பும் ஏற்படும். அதனால் பல்வேறு சிக்கல்கள் நீங்கி உறவு தெளிவடையும். அதுமட்டும் இல்லாமல் உங்கள் காதலர் அவரது தோழிகளுடன் வெளியே செல்லும்போதும் அவர் இதனை பின்பற்றுவார். இதன் மூலம் பரஸ்பர புரிதல்களும் விட்டு கொடுத்தல்களும் அதிகரிக்கும். உறவு செம்மையாகும்.
உங்களுக்கும் உங்கள் காதலருக்கு இதனால் சண்டை அல்லது மௌனமாய் பேசாமல் இருப்பது போன்ற நிலைமை ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இதனைப்பற்றி முகத்திற்கு நேராக கேட்டோ அல்லது மென்மையாக நிலைமையை புரியவைத்து குறுஞ்செய்தி அனுப்பியோ நீங்கள் இந்த சண்டையை சரி செய்ய வேண்டும். முடிந்த வரை கண்களை பார்த்து பேசுவதால் பல்வேறு நம்பிக்கையின்மை பிரச்னைகளை சமாளிக்கலாம்.