சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமானது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இது இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து பல நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதனால், தினமும் ஏராளமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளும் விமான நிலையமும் இதுதான். இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
இங்கு ₹32,704.92 கோடி செலவில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதி விண்ணப்பத்தை அனுப்பியது. அதன்படி, பரந்தூரில் உத்தேச விமான நிலையத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலிருந்து வரும் பயணிகள் இந்த பரந்தூர் விமான நிலையத்திற்குச் செல்லும் வகையில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக ரயில் இயக்க திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 2035-ம் ஆண்டுக்குள், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்துக்கு 15 நிமிடங்களில் இந்த ஹைப்பர்லூப் ரயில் இயக்கப்படும்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது வெற்றிடக் குழாய்க்குள் மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் போன்ற வாகனம். குழாயின் உள்ளே ரயில் போன்ற வாகனம் உள்ளது. அதில் அமர்ந்து பயணிகள் பயணம் செய்வார்கள். இந்த ரயில் காந்த அலைகள் மூலம் பயணிக்கும்.
இதில் ஒரே நேரத்தில் 40 பேர் பயணம் செய்யலாம். இந்த அதிவேக ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
விமானத்திற்கு இணையான வேகம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் – பரந்தூர் விமான நிலைய வழித்தடத்தைத் தவிர, சென்னை துறைமுகம் மற்றும் அருகிலுள்ள முக்கிய தொழில்துறை பகுதிகளை இணைக்க ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலை இயக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் இதை அமல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்க குறைந்த அழுத்த குழாய்களில் காந்த இழுவை பயன்படுத்தும் ஹைப்பர்லூப் ரயில் சேவைக்கு எந்த தடமும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.