சென்னை: அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை சக்சம் செயலி (SAKSHAM APP) மூலமாக தெரிவித்து பயன்பெறலாம்.
23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் கழிப்பிட வசதி. குடிநீர் வசதி, சாய்வுத்தள வசதி, சக்கர நாற்காலி மற்றும் சக்கர நாற்காலியினை இயக்குவதற்கு உதவியாளர் ஆகிய வசதிகள் தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை தெரிவிக்க சக்சம் செயலி (SAKSHAM APP) தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இச்செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை தெரிவித்தால் அவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ள பணியாளர்கள் (Service Voters) தங்களது தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்பும் ETPBMS (Electronically Transmitted Postal Ballot Management. System) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.