மேட்டூர்: தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5,000 கன அடியாக அதிகரித்தது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாலும், வரும் நாட்களில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2,913 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,017 கன அடியாக அதிகரித்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து திறப்பை விட அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 112.38 அடியிலிருந்து 112.48 அடியாகவும், நீர் சேமிப்பு 81.83 டிஎம்சியிலிருந்து 81.98 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.