மேட்டூர் / தரம்புரி: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கில் பெய்த பருவமழை காரணமாக, அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 8,218 கன அடியாகவும், மாலையில் 16,341 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18,220 கன அடியாகவும், மாலையில் 22,469 கன அடியாகவும் அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் நேற்று 113.81 அடியாகவும், நீர் இருப்பு 83.94 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் 17 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.