பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நீண்ட நாட்களாக போராடி வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் இல்லை. 2026-27-ம் நிதியாண்டு முதல் விடுப்பு மட்டும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.சுரேஷ், கு.வெங்கடேசன், எம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு தொடர்பான அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றும் செயலாகும். கடந்த 4 ஆண்டுகளில் 7 முறை முதல்வரை சந்தித்துள்ளோம். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.
இது சமூக நீதிக்கு எதிரானது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மார்ச் 30-ம் தேதி எங்களது உயர்மட்டக் குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.