மதுரை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் விளையாட்டு அரங்கில் 2 நாள் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7:00 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக காளைகளை அடக்கும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து 900 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர்.
மைதானத்தில் நிற்கும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை கட்டிப்பிடிக்கும் வீரர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு, வடக்கு, திருப்பாலை, ஆனையூர் பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்கின்றன. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்பி வைக்கின்றனர்.
காளைகளை அடக்கும் வீரர்களை சுகாதார துறை டாக்டர்கள் பரிசோதனை செய்து, தகுதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர். அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் அரங்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வரும் பார்வையாளர்களின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜல்லிக்கட்டை காண மைதானத்திற்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அரங்கிற்கு அனுமதி இலவசம். போட்டியை காண மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.