கொடைக்கானல்: நேற்று விடுமுறை நாளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கொடைக்கானல் வெறிச்சோடி காணப்பட்டது. இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் கோடை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ‘இ-பாஸ்’ நடைமுறையில் உள்ளது.
மேலும், கோடை விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படும் என்று வாகனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால், இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாடுகள் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளை விட, கடந்த 2 ஆண்டுகளில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கொடைக்கானல் வெறிச்சோடி காணப்படுகிறது. மே 1-ம் தேதி அரசு விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்தை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நேற்று வந்தனர். இதன் காரணமாக, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, ரோஸ் பூங்கா, குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
எப்போதும் பரபரப்பாகவும், விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கொடைக்கானல் ஏரிச் சாலை, 12 மைல் ரிங் சாலை, ஏழு சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. “கோடை காலத்தில் 2 மாதங்கள் மட்டுமே அதிக போக்குவரத்து இருக்கும். சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தால் மட்டுமே கொடைக்கானல் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் வருமானம் பெறுவார்கள்” என்று கொடைக்கானல் வணிகர்கள் தெரிவித்தனர்.
இந்த 2 மாதங்களில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலத்திற்காக கடன் வாங்கி எங்கள் தொழிலில் முதலீடு செய்துள்ளோம். இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாடுகளால் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை நம்பியிருந்த வர்த்தகர்களும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதற்குப் பதிலாக வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். எனவே, இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.