சென்னை: ஆமணக்கில் உள்ள இலை, வேர், விதை அனைத்தும் கசப்பு தன்மையை கொண்டுள்ளது. இந்த ஆமணக்கு இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இது பெரிய செடிகளாக வளரும் தன்மையுடையது. இந்த ஆமணக்கு 10 அடி வரை வளரும். இது எளிதில் உடையக்கூடிய தண்டுகளை கொண்டுள்ளது. இந்த ஆமணக்கு விதையை முத்துக்கொட்டை என்றும் சொல்வார்கள்.
இந்த ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆமணக்கு விதையின் மேல் தோலை நீக்கி விட்டு, அதில் உள்ள விதையை அரைத்து கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடைந்து குணமாகும்.
ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலை சம அளவு எடுத்து கொண்டு, அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். இதுபோன்ற நாட்களில் உணவில் உப்பு, புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.
ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி அதை கட்டிகள் மீது வைத்து கட்டிக்கொண்டால் கட்டிகள் பழுத்து உடையும். அதுபோல இந்த வதக்கிய இலைகளை கை மற்றும் கால்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் கட்டினால் வீக்கம் குணமாகும். மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கும் நல்ல தீர்வளிக்கும்.
ஆமணக்கு வேரை அரைத்து சாப்பிட்டு வருவதால் குடலில் உள்ள கிருமிகள் அழியும். இது வாத நோய்களை குணமாக்குகிறது. இந்த ஆமணக்கு இலை வாயு தொல்லைகளை நீக்க பயன்படுகிறது. இது உடல் சூட்டை தணிக்கும் தன்மை உடையது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொண்டால் இந்த ஆமணக்கு இலையை எண்ணெயில் வதக்கி ஒத்தரம் கொடுக்கலாம்.