சென்னை: பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 8 கி.மீ., தூரம் கொண்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் ஏப்., 20-க்கு பின் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடம் (26.1 கி.மீ.) சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களில் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, போரூர் – பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே பல இடங்களில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் தற்போது உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பாதை மற்றும் மின்னணு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் கடந்த 20-ம் தேதி பூந்தமல்லி பணிமனை முதல் முல்லை தோட்டம் வரையிலான 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 கிலோ மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட சோதனை ஓட்டம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்த ஆண்டு டிசம்பரில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சில மாதங்களுக்கு முன் பூந்தமல்லி பணிமனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை செய்யப்பட்டது.
கடந்த 20-ம் தேதி பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரை சோதனை ஓட்டம் நடந்தது. இதையடுத்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மொத்தம் 8 கி.மீ. ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு முழு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்கள்.