தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 7-வது கூட்டம் மற்றும் தமிழ்நாடு வீட்டு பணியாளர் நல வாரியத்தின் 5-வது கூட்டம் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு அரங்கில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி. கணேசன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு செயலர், கொ.வீர ராகவ ராவ், தொழிலாளர் நல ஆணையர், திரு.சி.அ. ராமன் ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி. கணேசன் கூறியதாவது:- தற்போது, தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 47,23,393 தொழிலாளர்கள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், இறுதி சடங்கு, விபத்து ஊனம், ஊனமுற்றோர் ஓய்வூதியம், மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

1000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சொந்தமாக ஆட்டோ ரிக்ஷா வாங்கவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதன்படி, 1000 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ மானியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1500 பெண் பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிப்ரவரி 28-ம் தேதி வரை ஓட்டுநர் நல வாரியத்தின் கீழ் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 978 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், வீட்டுத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 690 பயனாளிகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை ரூ.65.82 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில் தொழில் அதிபர்கள், தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியச் செயலர் ஆ.திவ்வியநாதன் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர் நல வாரியச் செயலர் த.தர்மசீலன் நன்றியுரையாற்றினார்.