மதுரை: வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக ஆட்சிக் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த அடிப்படை வசதிப் பணிகளும் செய்யப்படவில்லை.
பதிவுத் துறையில் பத்திரம் பதிவு செய்வதற்கு 10 சதவீத பணம் எடுக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியுள்ளார். எந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் 10 சதவீத லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்திரப் பதிவுத் துறையில் எவ்வளவு ஊழல் நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியும்.

சிபிஐ வழக்குகள் நடந்து வருவதால், அதைப் பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் எந்த நிலமும் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்படவில்லை. எந்த துணைப் பதிவாளரும் தவறு செய்தால், அது சுட்டிக்காட்டப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4-ம் தேதி ஒரே நாளில் ரூ.274 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
இது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் பதிவுத் துறையின் ஆண்டு வருமானம் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.9 ஆயிரம் கோடி வரை இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டு ரூ.24 ஆயிரம் கோடி வரை வருமானம் இருந்தது. இந்த ஆண்டு ரூ.26 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.