இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணையில் தலா 7 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூரில் தலா 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் சுருள்கோடியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளில், வளிமண்டலத்தில் தாழ்வான பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ஒரு சில இடங்களிலும், 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.