சென்னை: தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை முன்னாள் அதிமுக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை படிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை உறுதி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் சமக்ர சிக்ஷா திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்கு அறுபது சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு நாற்பது சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2024-2025-ம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி, தமிழக அரசு மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமக்ர சிக்ஷா திட்டத்தின் நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர், மேலும் 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதால், தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், ஆசிரியர் பயிற்சி, பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளும் அரசின் சார்பாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25 சதவீத மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான பிரச்சனையாகும். இந்தக் காரணத்தைக் கூறி நிதியை வெளியிடாதது அப்பாவி ஏழை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். இது வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும் கூட்டாட்சி கொள்கைக்கும் எதிரானது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வெளியிடப்படாதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களைப் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2024-2025-ம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு உடனடியாக ரூ.2,151 கோடியை விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.