பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் ஊர்வலம் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ளது. பழனி திருஆவினன்குடி ஆறுமுகக் கோயிலின் மூன்றாம் கிளையான திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேவல், மயில், வேல் உருவங்கள் கொண்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தெய்வானை, உற்சவர், விநாயகர், மயில், துவாரபாலகர் ஆகியோருக்குத் தாங்கி கட்டப்பட்டது. தொடர்ந்து, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி பட்டகர் மடத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரும் பக்தர்கள், பழனி மலைக்கோயிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி காமத்தேனு, ஆட்டுகிடா, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவின் ஆறாம் நாளான ஏப்.10-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 8.30 மணிக்கு சுவாமி திருமஞ்சன வடிவில் வெள்ளி ரதத்தில் வீதியுலாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரம் நாளான ஏப்ரல் 11-ம் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம், மாலை 4.30 மணிக்கு கிரிவலப்பாதையில் ஊர்வலம் நடக்கிறது. ஏப்ரல் 14-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.