தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட, இணையவழியில் விண்ணப்பித்து ஒரே நாளில் கடன் பெறும் புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும், 362.77 கோடி ரூபாய் செலவில் நிறைவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், 512.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830.06 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதியமான் கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடி திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே, தமிழக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ரமேஷ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மு.தருமலிங்கம் தலைமையில் ஒரு குழு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது. தமிழக அரசு பள்ளிகளில் நீண்டகாலமாக பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனவும், பணி நிலைமைகள் சீர்செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் மனுவை அளித்தனர்.
இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பகுதி நேர ஆசிரியர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மே மாதத்தில் சம்பளமும் சலுகைகளும் கிடைக்கவில்லை. இந்த குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்த இயலாது. எனவே 15 ஆண்டுகளாக வழங்கப்படும் தொகுப்பூதிய முறையை நீக்கி, காலமுறை சம்பளம் வழங்கி, தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.