சென்னை: தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக்க, வெளியுறவு அமைச்சகம் சென்னையில் நடமாடும் பாஸ்போர்ட் வேன் சேவையைத் தொடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் சேவைத் திட்டத்தின் இணைச் செயலாளரும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமார் தலைமை தாங்கினார். பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறியதாவது:- தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு கூடுதலாக, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கம்.

பாஸ்போர்ட் சேவைகளைப் பெற மக்கள் இனி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை. இந்த வேன் முதலில் தாம்பரத்தில் நிற்கும். பின்னர், பாஸ்போர்ட் பெறுவதற்கான கால வரம்புகள் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்லும். பாஸ்போர்ட் சேவை போர்டல் மூலம், பாஸ்போர்ட் சேவைகளைப் பெறுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.