ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் அரங்கத்தில் நடைபெறும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வை தமிழக பாஜக நடத்துகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான யோசனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

பவன் கல்யாண் இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அவரை வரவேற்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் காத்திருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பவன் கல்யாண் பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழக பிரபலங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இன்று அல்லது நாளை நடைபெறும் இந்த சந்திப்புகளில் அவர் தமிழ்நாட்டில் ஜனசேனா கட்சி ஆரம்பிக்கக்கூடிய சாத்தியத்தையும் விவாதிக்கவுள்ளார்.
‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்ற தமிழ் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் யோசனையை அடிப்படையாகக் கொண்டது. இது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும். இரண்டாம் கட்டமாக பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தல், பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் தேர்தல் செலவுகள் குறைவதுடன், வருடந்தோறும் தேர்தல் சூழ்நிலையால் ஏற்படும் நிர்வாகச் சுமை மற்றும் அரசியல் மந்த நிலையை தவிர்க்க முடியும் என நம்புகின்றனர். ஒரே தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், ஒரே பிரச்சார காலம், ஒரே விதிமுறைகள் என்பவை இதில் அடிப்படையாக இருக்கும்.
இதற்கு ஆதரவாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் பரிந்துரைகள் அளித்துள்ளது. ஆனால் இதற்கே எதிராக சில முக்கிய சந்தேகங்களும் எழுந்துள்ளன. தேர்தல் முடிந்த பின் மத்திய அல்லது மாநில அரசு கவிழ்ந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? குறிப்பாக, சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 174 இல் திருத்தங்கள் தேவைப்படுகிறது. இது மாநிலங்களின் அரசியல் உரிமைகளை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த மாபெரும் பரிந்துரையை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. பவன் கல்யாணின் பங்கேற்பு இந்த முயற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும். அவரது வருகை, தமிழ் மற்றும் ஆந்திர மாநில அரசியலில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் வாய்ப்பு கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.