சென்னை: கோடை காலத்தின் முக்கியமான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தற்போது நிலவி வருகிறது. மே மாத தொடக்கத்தில் இருந்தே வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் பிறகு, வெப்ப சலனம் காரணமாக, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது, ஆனால் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், அடையாறு, பட்டினம்பாக்கம், மேடவாக்கம், தரமணி உள்ளிட்ட பல இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த மழையால், சென்னையில் நேற்று வானம் மேகமூட்டமாக இருந்தது. மேலும், வெப்பம் தணிந்து, வானிலை குளிர்ச்சியாக இருந்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலை அனுபவித்த மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.