மதுரை: மதச் சின்னங்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த பெரியார் பெருத்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழாவில், சைவம், வைணவ மத சின்னங்களை பெண்களுடன் ஒப்பிட்டு அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார். இதுகுறித்து, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி தனபால் விசாரித்தார். மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே, வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என்று கூறப்பட்டது. இதை பதிவு செய்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.