சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டுச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி சார்பில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த வலுவான, வெளிப்படையான சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் புதிய வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பிரதிவிராஜ், தேர்தல் அலுவலர்கள் கே.ஜெ. பிரவீன் குமார், எம்.பி. அமித், கட்டா ரவிதேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ரா. பானுகோபன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.