தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளும் தயாராக உள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆண்களுக்கு 10 படுக்கைகளும், பெண்களுக்கு 7 படுக்கைகளும் கொண்ட டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெங்குவுக்கு தனி வார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.