தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி துவங்குகிறது. கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன.
தமிழகத்தில் அமைக்கப்பட்ட 3,316 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். கணிதம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, “கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகளில் பெரும்பாலான கேள்விகள் எதிர்பார்க்கப்பட்டவை.

சராசரி மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள். அதே சமயம் கணிதத்தில் 5-க்கு 4 மதிப்பெண் வினாக்களும், வணிகவியல் பாடத்தில் 5-க்கு 2 வினாக்களும் சற்று கடினமாக கேட்கப்பட்டன. எனவே, முழு மதிப்பெண் (சென்டம்) பெறுபவர்களின் எண்ணிக்கை சற்று குறையலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிளஸ் 2 வகுப்புக்கான கணினி அறிவியல், புள்ளியியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடக்கிறது. ஒட்டுமொத்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி முடிவடைந்து, மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.