பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:- விடைத்தாள் திருத்தம் செய்ய, தமிழகம் முழுவதும், 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் முகாம்களுக்கு மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்கி, ஏப்., 17-ம் தேதி வரை நடக்கிறது.
இப்பணியில், 46 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அதன்பின், மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து, திட்டமிட்டபடி மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, திருத்தத்தின் போது கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.