சென்னை: தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 4-ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில், ஏப்., 18-ல் கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளியும், 20-ல் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

இதனால், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாட முடியாத நிலை உள்ளது. இந்நிலையை உணர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விழாவை சிறப்பாக கொண்டாட உதவும்.
மேலும், மற்ற ஆசிரியர்களும் தங்கள் வழக்கமான வேலையில் இருந்து சிறிது ஓய்வு பெறுவார்கள். வரும் நாட்களில் புத்துணர்ச்சியுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவை வழிவகுக்கும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு ஏப்ரல் 19-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.