சென்னை: இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.வி. கார்த்திக் 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பம்ப் மோட்டார் தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில், உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கு, “உயர் திறன் மையம்’ அமைக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. பம்ப் தயாரிப்பில் கோவைக்கு தனி இடம் உண்டு. நாட்டின் முதல் பம்ப், 1926-ல், கோவையில் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில், பம்ப் உற்பத்தியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட் அறிவிப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொழில்துறை பயணிப்பதற்கான பாதையை உருவாக்கும். இந்த உயர் செயல்திறன் மையம் எண்ணெய், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் பயன்படுத்தப்படும் பம்புகளை வடிவமைக்க உதவும். இவ்வாறு கார்த்திக் கூறினார்.