சென்னையில் ரயில்வே வெளியிட்ட தகவலின் படி, எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156ன் கீழ் குற்றமாகும். இதுபோல் பயணம் செய்வோர் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயின் கீழ் மட்டும் தினமும் 350க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. பணி மற்றும் கல்வி காரணமாக பலர் இந்த ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், அமர்ந்தும் பயணம் செய்வதை தொடர்ந்து பல விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூட சில பயணிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் இப்படியே பயணம் செய்கிறார்கள். இது பயணிகளின் உயிருக்கு நேரடியான ஆபத்தாகும்.
இதைத் தடுக்கவே ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. படிக்கட்டுப் பயணத்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குற்றச்செயல் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய செயலில் ஈடுபடும் பயணிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படையும், போலீசும் பணியில் ஈடுபடுகிறார்கள். ரயில்வே பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்று, இது அவசியமான கட்டுப்பாடு என பாராட்டினர்.
அதேசமயம், அதிக நெரிசல் நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் எனவும், ரயில்கள் தாமதமின்றி இயக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் இரைச்சல் இல்லாமல் பயணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.