தமிழகத்தில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆறு பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக நான்கு இடங்களையும், அதிமுக இரண்டு இடங்களையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த இரண்டு இடங்களில் ஒன்றை தேமுதிகவுக்கோ ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது அதிமுகவுடன் உள்ள முக்கிய கூட்டணி கட்சி தேமுதிகதான். கடந்த மக்களவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்தச் சேர்க்கையில் மாநிலங்களவை சீட் பற்றி எந்த எழுத்துப்பூர்வ உறுதியும் வழங்கப்படவில்லை. என்றாலும், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து, மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என கூறியதாகவும், அதிமுகவின் கடமையாக இருப்பதாகவும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தின் பேரில் தேமுதிகவின் சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, சீட் கோரிக்கை குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் இதைப் பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் செல்வது, பல்வேறு சந்தேகங்களை தூண்டியுள்ளது.
தற்போது அதிமுகவுக்கே உள்ள இரு சீட்களில் யாருக்கு ஒதுக்குவது என்ற பிரச்சினை கட்சிக்குள் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீட் வழங்க வேண்டும் என்ற ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு வலுத்துள்ள நிலையில், கோகுல இந்திரா, செம்மலை, அன்வர் ராஜா போன்றோரும் போட்டியில் உள்ளனர். வழக்குகளை கையாளும் இன்பதுரை மற்றும் ஐடி பிரிவில் செயலில் உள்ள ராஜ்சத்யனும் பதவியை நோக்கி உள்ளனர்.
இந்நிலையில், தேமுதிகவுக்கு ஒரு இடம் வழங்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்ற தகவல்கள் உலா வருகின்றன. காரணம், அதிமுக முன்னாள் கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை பின்னர் பாஜகவுடன் இணைந்த சம்பவங்களே. இதனால், எடப்பாடி பழனிசாமி தற்போது எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்.
விழிப்புணர்வு இல்லாமல் கூட்டணி வைத்து பதவிகள் வழங்கி, பின்னர் அதே கூட்டணி கட்சிகள் வேறு பக்கம் செல்லும் நிலைமையால், அதிமுக தற்போது தேவையான உறுதி இல்லாமல் எந்த ஒரு உறுதியையும் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கலாம். எனவே, மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து வருவது போலத் தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை இந்த பரபரப்பு தொடரும் எனலாம்.