சென்னை: அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நிலவும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வந்து, காலியாக உள்ள 8 பல்கலைகழக துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை.
இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதத்திற்குள் 85% பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக்கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கியுள்ளன. இதில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 30 மாதங்களாகவும், கல்விப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் முதல் 29 மாதங்களாகவும் காலியாக உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு மே 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாவிட்டால், 13 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், 85% பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கும்.
துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நிரந்தரப் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், நிதி அலுவலர்கள் இல்லாததால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடங்கியுள்ளன. பல்கலைக்கழகங்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறுவதில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும், துணைவேந்தர்களின் கையொப்பமில்லாமலேயே வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள் மதிப்பற்றதாக இருப்பதால், மாணவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான தேர்வுக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதி ஒருவரைச் சேர்ப்பதா என்பதில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதலாகும். கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கக்கூடாது. இப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண வேண்டும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, கவர்னர், தமிழக அரசு மோதல் தொடர்பான வழக்குகளுடன் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக அந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இடைக்கால தீர்ப்பு அல்லது ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, 8 பல்கலைகழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,” என்றார்.