சென்னை: தமிழகத்தில் 2,553 மருத்துவர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்ப 24,000 டாக்டர்கள் ஜனவரி 5-ம் தேதி தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், மதிப்பெண்களுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 10 நாட்களில் முடிக்கப்பட்டு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

எந்தெந்த அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் மருத்துவர் இடங்கள் தேவை, கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விவரங்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். தமிழகம் பின் தங்கியதற்கு மத்திய அரசு தான் காரணம். முடிந்தால் மத்திய அமைச்சர் நட்டாவிடம் தமிழிசை எடுத்துரைத்து தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள் வழங்க ஆதரவு அளித்தால் நல்லது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.