சென்னை: தமிழ்நாட்டில் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் இந்தத் தேர்வை எழுதினர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 83 முகாம்களில் விடைத்தாள்களைத் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இதைத் தொடர்ந்து, விடைத்தாள்களைத் திருத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மே 8-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார். இந்தப் பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கருத்து.