தமிழக பள்ளிக் கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17 வரையிலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24 வரையிலும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நாட்களில் மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி, கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாக பராமரிப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு, பள்ளிகளால் தயாராக உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் பிற நலத்திட்டப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை மாணவர்கள் தங்கள் தற்போதைய அட்டைகளுடன் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை நாட்கள், ஆசிரியர் பயிற்சி, அட்டவணை, உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கொண்ட கல்வியாண்டு காலண்டர், 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, வரவிருக்கும் கல்வியாண்டுக்கான (2025-26) காலண்டரை பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.