திருப்பூர்: ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் தலையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (24), கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) ஆகியோர் ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், ரிதன்யா கடந்த 28-ம் தேதி தனது காரில் இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் தலையீட்டு மனு தாக்கல் செய்தனர். பின்னர் இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சித்ரா தேவியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது, சித்ரா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.