ஜனவரி முதல் மார்ச் வரை 3 முறை கனமழை பெய்ததால், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை ஒட்டியுள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் உள்ளிட்ட பகுதிகளில், 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல், 3 முறை கனமழை பெய்ததால், உப்பளங்களில் மழைநீர் தேங்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, இந்த 3 மாதங்களில் ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தியாகும். ஆனால், அடிக்கடி மழை பெய்து வருவதால், 10 ஆயிரம் டன் உப்பை கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என, உப்பள உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உப்பு உற்பத்தி குறைந்ததால், விலையும் அதிகரித்துள்ளது. ஒரு டன் உப்பு, ரூ.1500-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் 4000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை உயர்ந்தாலும், விற்பனைக்கு உப்பு இல்லாததால், உற்பத்தியாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தற்போது உப்பு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மீண்டும் மழை பெய்தால் ஆண்டுக்கு 600,000 டன் உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.