சென்னை: சென்னை கொடுங்கையூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி, கழிவு இல்லா சென்னைக்கான கூட்டணி சார்பில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டணியின் நிர்வாகிகள் ஜியோ டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகராட்சி திடக்கழிவுகளை கையாள, வடசென்னையில் தினமும் 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் குப்பை எரிக்கும் இயந்திரம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த குப்பை எரியூட்டிகள் மிகவும் ஆபத்தான சாம்பல் கழிவுகள் மற்றும் நச்சு வாயுக்களை உற்பத்தி செய்கின்றன. இதுபோன்ற எரியூட்டிகள் இந்தியாவில் எங்கு நிறுவப்பட்டாலும் தோல்வியடைந்துள்ளன.

டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தொற்று நோய்களுக்கு எரியூட்டிகளே முக்கிய காரணம் என நியூயார்க் டைம்ஸ் ஆய்வுக் கட்டுரையில் தெரியவந்துள்ளது. வடசென்னையில் ஏற்கனவே பெட்ரோல், ரசாயன தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் என 36 சிவப்புப் பட்டியலில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளன. நகரின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கும் இங்குதான் உள்ளது.
இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டி நாளொன்றுக்கு 3,570 டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இது ஒரே நாளில் 10.50 லட்சம் கார்கள் வெளியேற்றும் மாசுவுக்கு சமம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, தலைவலி, தோல் பிரச்னை, புற்றுநோய், கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னையை ‘கார்பன் நியூட்ரல்’ ஆக்கும் முயற்சிக்கு, இத்திட்டம் எந்த வகையிலும் உதவாது. எனவே, சென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலையை தமிழக அரசும், மாநகராட்சியும் கைவிட வேண்டும். மாறாக, திறம்பட குப்பை மேலாண்மையை செயல்படுத்த மாநகராட்சி முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.