இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கூட்டு பணிக்குழு கூட்டம் அவசியம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிப்.19 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று படகுகளின் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனால், மீனவர்களும், அவர்களது குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளதால், உடனடி தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.அவர்களது மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டும்.மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, மத்திய அரசு கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், மத்திய அரசின் செயல்பாடு இதற்கு இன்றியமையாதது என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.