சென்னை: இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையராஜா, 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து 15,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். அண்மையில், தனது வாழ்நாள் கனவான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றியுள்ளார்.

சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற இளையராஜா, தற்போது உலகமெங்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா லண்டனில் நிகழ்ச்சியை முடித்து, சென்னை திரும்பிய போது, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவரை நேரில் சென்று வரவேற்றார். அதன் பின், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நன்றி கூறிய இளையராஜா, தமிழ்நாட்டின் பாராட்டை உரிமையாக ஏற்றுக்கொண்டார். அப்போதுதான், முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவுக்கான பாராட்டு விழா ஜூன் 2ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.